Sunday, 29 October 2017

என் அருகில் நீ வேண்டும்!
ஆதித்தனின் அழகு கிரணங்கள்,
 அம்புலியை மறைத்து வர,
அடிவானம் விடியும் அத்தருணம்
என் அருகில் நீ வேண்டும்!

மரங்களின் நிழல்களில்,
மரகத பச்சை புல் வெளியில்,
 இறங்கி வந்த தேவதையாய்,
என் அருகில் நீ வேண்டும்!

மேகலையின் மணிகள் செல்லமாய் சிணுங்க,
காதோரம் கார்குழல் காற்றில் சிலிர்க்க,
கதை பல பேசும் கண்கள் சிரிக்க,
என் அருகில் நீ வேண்டும்!

அந்தி சூரியனின் செங்கிரணங்கள்,
சிந்தி சிதறும் உன் செழுமையான கன்னங்கள்
தித்திக்க, நான் தரும் முத்தங்களில் சிவக்க,
என் அருகில் நீ வேண்டும்!

பெருமழை பேரொலியோடு முழங்கிப் பெருக,
பேராதரவாய் எனை நீ நெருங்கி அணைக்க,
பெரும்பெறாய் உனை நான் தாங்க,
என் அருகில் நீ வேண்டும்!

மந்தமாருதம் மாலைதனில் நழுவ,
தந்தக்கைகள் மாலையாய் எனைத் தழுவ,
காலங்காலமாய்,
என் அருகில் நீ  வேண்டும்! 

பனி நிலவு உலா வரும் இரவில்
உன் கனி இதழ் சுவைக்க ,
நறுமணத்துடன் உன் மேனி சிலிர்த்து அடங்க,
என் அருகில் நீ வேண்டும்!

நெடும் பகலின் முடிவாக,
நடு இரவில் முழுதாக,
என் அருகிலும்,

எனக்குள்ளும் நீ வேண்டும் அன்பே!

No comments:

Post a Comment